Ads 468x60px

Featured Posts

Thursday, March 13, 2014

எனக்குனு ஒரு ப்லாக்: நட்பு

எனக்குனு ஒரு ப்லாக்: நட்பு: தங்கையின் திருமணம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த். உறவினர் கூட்டம் நண்பர்கள் வட்டம் என எங்கும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். அனைவரையும...
இன்னும் நடக்க... "எனக்குனு ஒரு ப்லாக்: நட்பு"

Thursday, March 7, 2013

மகளிர் தினம்! படித்ததில் பிடித்தது! - வாழ்கையை நழுவ விடாதே!


அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! (08/03)

ங்கையராய் பிறந்திட மாதவம் புரிந்திடவேண்டும்! இந்த கூற்று எந்தளவுக்கு உண்மையோ? இன்றைய பெண்கள் நிலை அப்படி உள்ளது! அடிமையாய் இருந்தார்கள், அடக்கியாண்டார்கள் , அடங்கிபோனார்கள், இப்போது இயந்திரகதிக்கு உள்ளானார்கள்!! 

அதுசரி சிலர் தங்களுக்குள் முணுமுணுப்பது எனக்கு தெரிகிறது.. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.. அப்படி நினைத்துகொள்ளுங்கள் ஆண்களே! இங்கே நான் ஆதங்கபட்டது பெரும்பான்மையான பெண்களின் நிலையை பற்றி!! 
***************************************************************************************************************************
ரண்டு நாட்களுக்கு முன், என் தோழரின் அலுவலகத்துக்கு பக்கத்துக்கு வீட்டில் ஒரு நடுத்தர வயது ஆண் தன் மனைவியை அடித்து உதைக்க, அதற்கு தூபம் போட்டது, அவரின் அம்மா மற்றும் சகோதரிகள். அடிவாங்கிய மனைவி அக்கம் பக்கம் இருக்கும் ஆட்களை கத்தி கூப்பிட்டு தன்னை காப்பாற்ற கெஞ்சியும் எவரும் தலையிடாத அற்புத இடம் இந்த நகரம் (நரகம்).
அடிவாங்கியவளும் பெண், அடிப்பதற்கு தூண்டுவதும் பெண். பெண்ணுக்கு பெண் தான் என்றும் எதிரி என்ற சொல் என்று தான் நீங்குமோ?
**************************************************************************************************************************
தே மங்கையர் தினத்தில் ஒரு அருமையான மகளிர் குறித்த நாவலை பற்றி எழுதுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க்கையை நழுவ விடாதே!

"ஜீவிதம் சேஜாரநீகு" எனும் திருமதி D. காமேஸ்வரி எழுதிய தெலுங்கு நாவலை, தமிழில் திருமதி. கௌரி கிருபானந்தன் "வாழ்க்கையை நழுவ விடாதே" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். 

ஒரு நாவல் தன் மூலத்திலிருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதன் சுவை, அர்த்தம் குன்றாமல் கொடுப்பது மொழிபெயர்பாலரின் திறத்தையும் அவரின் கிரகிப்பு தன்மையையும் பொறுத்தது. அந்த வகையில் நம் மொழிபெயர்ப்பாளர் தமிழ் வாசகர்களுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்சொன்ன இந்த நாவலை படிக்கும் படி எனக்கு பரிந்துரைத்தவர் கௌரி அம்மா தான். அதற்காகவே என் தனிப்பட்ட நன்றிகள். இல்லையென்றால் இப்படிப்பட்ட எழுத்துக்களை தவறவிட்டு இருப்பது நிச்சயம். கடந்த புத்தக கண்காட்சியில் இதுபோல சில மொழிபெயர்ப்பு நாவலைகளை வாங்கினேன். 

அவற்றில் நான் படித்து ரசித்த இந்த நாவலைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் இந்த புத்தகம் என்னை அவ்வளவாக கவரவில்லை முதல் இரு பக்கங்கள் படிக்கும் வரை. அதன் பின்பு முடிக்கும் வரை ஆவல் குன்றவில்லை. இது தான் இதன் சிறப்பு. 

இனி கதைசுருக்கம்:

வித்யா - இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த கடைக்குட்டி பெண். வீட்டுக்கு செல்ல மகள். முதுகலை MA படித்துகொண்டு இருக்கிறாள். கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நிர்மலாவுடன் வித்யா நெருங்கிய தோழியாகிறாள். வித்யாவின் சுபாவம் அனைவரையும் கவர்ந்து விடும் கலகலப்பான குணம். நிர்மலாவை பற்றி வித்யாவிற்கு தெரிந்ததெல்லாம் அவள் ஒரு கல்லூரி விரிவுரையாளர், திருமண செய்யாமல் தனியாக வாழ்கையை சுதந்திரமாக அனுபவிப்பவள். 

வித்யாவின் முதுகலை இரண்டாம் வருடம் அவளுக்கு பிரபாகரனுடன் திருமணம் நிச்சயமாகிறது. பிரபாகரன் வித்யாவிற்கு நேர் எதிர் குணம். அதிகம் பேசமாட்டான். இது முதல் பார்வையிலேயே வித்யாவிற்கு ஒரு உறுத்தலையும், தன் குணத்திற்கு ஒத்து போவானோ என்ற பயத்தையும் உண்டுபண்ணிவிட்டது. நிர்மலா தரும் தைரியத்தின் பேரில் திருமணதிற்கு சம்மதிக்கிறாள். தன் முதுகலை படிப்பு முடிய ஆறு மாதமே இருக்கும் நிலையில் திருமணம் நடைபெறுகிறது. முதலில் வரதட்சணை ஏதும் வேண்டாம் என சொல்லும் பிரபாகரன் குடும்பத்தார் பிறகு சீர் செய்யவில்லை என வந்த முதல் நாளே வித்யாவை ஏசுகின்றனர். இதற்கு அவள் கணவனும் உடந்தை. மேலும் கணவன் தன் பெற்றோர் மீது அளவுகடந்த கண்மூடித்தனமான பாசம் வைத்திருப்பவன். மனைவியை தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அடங்கி நடக்க வேண்டும் என நினைப்பது மேலும் வித்யாவை கோபமாக்குகிறது. 

ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்குவாள் கணவனின் அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு இருந்தால்! கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறி கூவலாம்! அதுவே கேள்விக்குறியாக இருந்தால் அந்த வாழ்கையே நரகம் என்ற நிலையில் வித்யா மனமுடைந்து போகிறாள். திருமணமான இரண்டு மாதங்களிலேயே வாழ்க்கை முடிவுக்கு வந்ததுபோல ஒரு விரக்திக்கு உள்ளாகிறாள்.

தன் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான சிறுசிறு செயல்களுக்கு கூட தன் பெற்றோரின் அறிவுரை, அனுமதி வேண்டும் என நினைக்கும் கணவனுடன் வாழ்வதைவிட வெட்டியாய் பிறந்த வீட்டில் இருப்பதே நலம் என, தன் சகோதரனின் திருமணத்திற்காக வரும் வித்யா திரும்பி செல்வதை தவிர்க்கிறாள். இதனால் கோபமடையும் பிரபாகரன் தன் பெற்றோரில் மூலம், மகளை திருப்பி அனுப்புமாறு அவளின் பெற்றோருக்கு கடிதம் எழுதுகிறான். 
பிறந்த வீட்டிற்கு வரும் வித்யாவை பார்க்க நிர்மலா வருகிறாள். வித்யாவின் பிரச்சனைகளை கேட்டு, பொறுத்திருக்குமாறும், அவசரம் வேண்டாம் என அறிவுறுத்துகிறாள். இதனால் தன் உணர்வுகளை மதிக்கவில்லை என மேலும் கோபமடையும் வித்யாவை வழிக்கு கொண்டுவர, தன் கடந்த கால வாழ்கையை அவளுக்கு எடுத்துக் கூறுகிறாள் நிர்மலா.

நிர்மலா ஒரு பட்டதாரி பெண், வித்யாவை போல மூன்று மகன்களுக்கு இடையே ஒற்றை மகளாய் பிறந்து சீராட்டி வளர்க்கப்பட்டவள். திருமண வாழ்வில் தோல்வியுற்று, முன்கோபம் பெண்கள் முன்னேற்றம், சுயகௌரவம் என கணவனுடம் நிரந்தரமாக பிரிந்து தந்தையின் ஆதரவுடன் பிறந்தவிட்டில் தஞ்சம் அடைகிறாள். பிறந்த வீடு அவளுடையதாக இருந்தாலும், தனக்கென ஒரு வாழ்க்கை அமைந்த பிறகு, அதை உதறி விட்டு வரும் பெண்களுக்கு பிறந்த வீட்டின் ஆதரவும் தஞ்சம் தான்! இதை மிக ஆழமாக நாவலில் சொல்லப்பட்ட விதம் ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று! 

பிரிந்து சென்ற மனைவி மறுமணம் செய்யாதிருக்கும் பொருட்டு, அவளின் கணவன் விவாக ரத்து கொடுக்க மறுக்கிறான். தந்தை ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞ்சராக இருந்தும் தன் மகளின் வாழ்க்கைக்கு வழி தேட முடியாமல் திணறும் இடத்தில் நம் பெற்றோரை கண் முன் நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர்!  தனக்கு பின் ஆதரவில்லாத மகளின் பாதுகாப்பிற்காக தன் சொத்தில் ஒரு லட்சம் ரொக்கத்தையும், பல லட்சம் பெறுமானமுள்ள வீட்டையும் தன் மகள் பெயருக்கு எழுதிவைத்து விட்டு உலகபந்தகளை விட்டு பிரிகிறார். 

தங்கைக்கு கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு தங்களை விட அதிகம் என அண்ணன்கள் கோபமுற்று வீட்டை விட்டு தன் குடுபத்துடன் வெளியேறுகிறார்கள். இதனால் அந்த பெரிய வீட்டில் நிர்மலாவுக்கு கிடைப்பது தனிமை என்ற சிறை தான்! 

இது மட்டுமல்லாது சமுதாயத்தில் கணவனிடம் இருந்து பிரிந்து  வாழ்பவள் என்ற நிலையில் பரிதாபத்திற்கு பதிலாக, ஆனவகாரி, குடும்பம் நடத்த தெரியாதவள், வாழாவெட்டி போன்ற பட்டங்களை சுமக்கிறாள். நிர்மலா வாழ்க்கையில் படும் இன்னல்களை மிக தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது. இப்படிபட்ட தனிமரமான வாழ்க்கை வித்யாவிற்கு வந்து விட கூடாது என அவளை நல்வழிபடுத்த தன் கதை முழுவதையும் சொல்கிறாள். 

ஆனாலும் ஆவேசமுரும் வித்யா, ஆண்களுக்கு அடிமைபடுத்த சொல்வதாக நிர்மலாவையே கோபித்துகொள்கிறாள். அவளை சமாதானபடுத்தி வித்யாவிற்கு நிர்மலா கொடுக்கும் ஆலோசனைகள், இன்றைய பெண்கள் அனைவருக்கும் தேவையானவை.

"கணவனிடம் இருக்கும் கெட்டகுணங்களை மட்டும் ஆராயாமல் அவனிடம் இருக்கும் ஒரு நல்ல குணத்தை எடுத்து சொன்னாலே அவன் மனம் குளிரும். வாழ்கையில் நம் கற்பனை கதைகளில் வருவதை போல கணவன் இந்திரனாக சந்திரனாக கற்பனை செய்து, பின் ஏமாற்றம் அடையாமல், ஒருவரை அவரின் குணங்களோடு நெருங்கினால் வாழ்க்கை என்றுமே சுவர்க்கம்! திருமணம் ஆன புதிதில் கணவனை தன் விருப்பத்திற்கு மாற்றுவதில் தான் மனைவியின் திறமையும் அடுத்த 50 வருட குடும்ப வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது; அவன் களிமண் என்றால் மாற்றுவது சற்று எளிது, அதுவே கருங்கல்லாக இருந்தால், உளிகொண்டு செதுக்கத்தான் வேண்டும். கைவலிக்கும் என்று விட்டு விட்டால் வாழ்க்கையும் நழுவி விடும். கணவனே வேண்டாம் எனக்கு வேலை இருக்கிறது சொந்த சம்பாத்தியம் இருக்கிறது பிழைத்து கொள்வேன் என இருபதில் முழங்கினாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் உன் எண்ணத்தில் மாற்றம்  வரும். அப்போது,  தவறவிட்ட, கடந்துபோன காலங்களை எண்ணி உன் நிகழ்காலம் சுமையாகிவிடும். 

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவருக்கு வாழ்க்கை சீக்கிரம் வெறுத்து விடும். தனக்கென நல்லவனோ கெட்டவனோ ஒரு கணவன், தனி குடும்பம்,  மணியான குழந்தைகள் இவைகளுக்கு,  நீ ஏங்கும் போது அதை விட்டு வெகு தொலைவில் இருப்பாய் என்னை போல!" இப்படி பலவகையில் சொல்லி வித்யாவை கரையவைக்கிறாள் நிர்மலா. 

இந்த அறிவுரையில்லாம் அவள் பிரபாகரனுடன் வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக அல்ல, எவருக்குமே ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அந்த வாய்ப்பை தவறவிட்டால்  பின் தன் வழியை பின்பற்ற வேண்டியது தான்! அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை தான் வித்யா பிரபாகரனுக்கு கொடுக்க வேண்டும் என நிர்மலா உந்தினாள். 

அந்த உந்துதலுக்கு பலனாக, வித்யா தன் கணவனுடன் சேர்ந்து வாழ சென்றாள். இயல்பில் சற்று கோபகாரியான வித்யா தன் கணவனிடத்தில் கோபத்தை வெளிகாட்டாமல், முதலில் அவன் போக்குக்கு சென்றாள். இது பிரபாகரனிடத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிறது. அவனுக்கு மனைவியின் பேரில் காதல் பெருக வழிவகுத்தது. இதை புரிந்து கொண்ட வித்யா மேலும் தன் கோப தாபங்களை அடக்கி அவன் பெற்றோரிடமும் இன்முகத்துடன் நடந்து கொண்டாள். ஒரு கட்டத்தில் தன் பெற்றோரை காட்டிலும் மனைவிதான் தன் இறுதிவரை வருபவள், தனக்காணவள், தன் கவலைகளுக்கும் இன்பதுன்பங்களுக்கு வடிகால் என்பதை புரிந்து கொள்கிறான். நிர்மலாவின் முயற்சியால் வித்யாவின் வாழ்க்கை வண்ணமயமாகிறது!

பெண்மை எனபது மிக மென்மையானது. அதை அன்பை கொண்டு எப்படிவேண்டுமானாலும் வளைக்கலாம். அதிகாரத்தை கொண்டு அடக்க நினைத்தால் நிம்மதி மட்டும் அல்லாது, வாழ்க்கையும் அழிந்து விடும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சிறந்த எடுத்துகாட்டு! அதே சமயத்தில் ஒரு பெண் நினைத்தால் சீர்கெட்ட தன் இல்லறத்தை நல்லறமாக மற்ற முடியும் என்பதை இந்த நாவல் நமக்கு விளக்குகிறது!

இந்த நூல் கிடைக்கும் இடம்: Alliance Company, 244 RK Mutt Road, Mylapore, Chennai. 600004,  044 2464 1314. 

இப்படிப்பட்ட நாவல் அவசியம் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் படிக்க வேண்டும் என்பது என் ஆசை!!

மிக நீண்ட இந்த பதிவை பொறுமையுடன் படித்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்!! 

அன்புடன்,
சமீரா
இன்னும் நடக்க... "மகளிர் தினம்! படித்ததில் பிடித்தது! - வாழ்கையை நழுவ விடாதே!"

Monday, March 4, 2013

வெங்காய வியாபாரி


ஹாய்!

நான் படித்து ரசித்த ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
************************************************************************************************************
பதவி : கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை...!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பதன் சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். 

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.!

************************************************************************************************************
எங்க அம்மாகூட கம்ப்யூட்டர் பத்தி ஒன்னும் தெரியலயேன்னு கஷ்டபடுவாங்க...நல்ல வேலை அவங்களுக்கு தெரியாததே!! தெரிஞ்சிருந்தா நல்ல சாப்பாடு கிடைக்காம போயிருக்கும்!!

அன்புடன் 
சமீரா...
இன்னும் நடக்க... "வெங்காய வியாபாரி"

Thursday, February 14, 2013

அன்பிற்கு ஒரு தினம்!!

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!!

ஆமா! நாடு இருக்கற நிலையில இது ஒண்ணுதான் குறைச்சல்ன்னு நீங்க சொல்றது எனக்கு நல்லா கேட்குது!! கொஞ்சம் ரிலாக்ஸ் பணிக்கலாம்னு தான்!!

பார்ட்டி வச்சி ரோஜா பூ கொடுத்து கொண்டாடறாங்களே அது உண்மையில காதலர் தினமே இல்லைங்க!! பரஸ்பர அன்பு விட்டுகொடுத்தல் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சி நடந்துக்கற (மிதிச்சி நடந்துக்கற) கணவான்களும் மனைவிகளும் கூட காதலர் தினத்த கொண்டாடலாம். சொல்லபோன திருமணத்துக்கு அப்புறம் வர்றதுதான் பாராட்டப்படவேண்டிய, போற்றபடவேண்டிய காதல்!!   

அதனால திருமணமானவங்க தங்களோட துணைகளுக்கு, பெண்ணாக இருந்தால் கணவர்களுக்கு  ஒரு கிரீடிங் கார்டும், ஆண்கள் மனைவிகளுக்கு தங்களின் கிரெடிட் கார்டுகளையும் (கிரெடிட் கார்டு இல்லன்னா என்ன பண்றதா? டெபிட் கார்டு கொடுங்க) இன்றைய தினத்தில் கொடுத்து ஆனந்த கடலில் ஆழ்த்துங்க...


இப்போ ஒரு அழகான கவிதை தொகுப்பை உங்களோட பகிர்ந்துகொள்கிறேன்...

என் மீது எவ்வளவு 
பிரியம் வைத்திருக்கிறாய்
என்றேன் 
கடலை பார்த்துக்கொண்டே...

ஒரு புருவ உயர்த்தலில்
வானத்தை காட்டினாய்
அப்போது!!
(அடடா....)

எனக்கு பிடித்த 
எல்லா பாடல்களையும் 
உன் ஐ-பாடல் வைத்திருக்கிறாய்!

என்னை உனக்கு பிடிக்குமா 
என்பதை மட்டும் இன்னும் 
ஐயப்பாட்டிலேயே  
வைத்திருக்கிறாய்!
(பாவம் பையன்.. இளையராஜா, AR ரகுமான் பாடல்கள் எல்லோருக்குமே பிடிக்கும்)

கோவில் தூணருகே 
உன் தந்தையோடு நின்று 
கொண்டிருந்தாய்..
யாரோ போல் நடக்கும் 
எனக்கு வழிவிட்டு 
ஒதுங்கி நிற்கும் 
அவருக்கு தெரியாது 
உன்னை கடப்பது ஒன்றும் 
அவ்வளவு எளிதல்ல 
என்பது!
(அகலவாக்கில வளந்துடங்களோ!!)

நாம் சுற்றியலைந்த 
சாலைகளில்
நம் பிள்ளைகளோடு
மீண்டும் பயணிக்க 
வேண்டும்...
நம் காதலுக்கு சாட்சியாய் நின்ற 
மரங்களும், சாலைகளும்
நம் காதலின் சாட்சிகளை 
பார்க்கட்டுமே!!  
 (ஐயோ.. இப்பவே பசங்களுக்கு ட்ரைனிங்-கா??) 

எப்போது புதிய அலைபேசி 
வாங்கினாலும் 
உன்னை முதலில் அழைத்து 
விடுகிறேன் ....

உன் பெயரையே 
முதலில் எழுதி பார்க்கிறது 
புதுப் பேனா!

வாழ்க்கை தொழிலில் கடவுள் 
எனக்கு போட்ட 
"முதல்" நீ!
(ஐயோ பாவம்? - வங்கிகள்!)

நீ என்னை காதலிக்கிறாயா 
என்ற கேள்விக்கான 
விடையை
எத்தனையாவது மலையைத் 
தாண்டி 
எந்தக் கடலுக்கடியில் 
எந்த கிளியின் இறக்கையில் 
வைத்திருக்கிறாய்!
(தெலுங்குப் பட பழைய டைரக்டரை அணுகவும்)

மணியோசையோடு நம்மை 
கடக்கிறது
தீயணைப்பு வண்டி..
உள்ளிருக்கும் நீர் தளும்பி 
கொஞ்சமாய் நனைக்கிறது
உன்னை!
தீ மெல்ல பற்றுகிறது 
என்னை!!
(இதுக்கு பூ(வை)அணைப்பு வண்டி தான் வரணும்) 

இத்தனை நாட்களாக 
காதலித்துக் கொண்டிருக்கிறோம் 
இன்னமும் என்ன 
புதிதாய் கொஞ்சல் என்கிறாய்..

அதே நாசி 
அதே காற்று
நொடிக்கு நொடி புதிதாய் 
சுவாசிப்பதில்லையா!
(வாவ்!! எக்ஸ்செல்லன்ட் - இனிமே யாராவது சலிச்சிக்குவீங்க??)

நீ 
காட்டி கொடுத்து விடுவாயோ 
என பயந்து பயந்து 
வெற்றுத்தாளை மடக்கி
உன் முன்னே போட்டேன்!

எடுத்துப் பிரித்து 
உதடு பிதுக்கி 
ஒன்றுமில்லையென நீ 
சிரித்த நொடியில்
பூத்தது தான் 
நம் காதல்! 
(மாவீரன்...)

கடற்கரை ஈர மணலில் 
நம் பாதங்களை பதித்து 
அதைச் சுற்றிலும் நீ வைத்த
சங்குகளில் ஒன்றை 
பத்திரமாக எடுத்து 
வைத்திருக்கிறேன் 
நம் பிள்ளைக்கு பாலூட்ட!
(வாழ்க தன்னம்பிக்கை)

என்னதான் நான் கொஞ்சம்(?) கிண்டல் பண்ணி இருந்தாலும், கவிதை பார்த்தா பயந்து ஓடற என்னையும் இத்தொகுப்பு கவர்ந்ததென்பத்தில் ஐயமில்லை!! 

இந்த கவிதைகள் அனைத்தும் சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட நர்சிம் எழுதிய "உன்னை அழைத்துப் போக வந்தேன்" என்ற கவிதை தொகுப்பு நூலில் இருந்து உறுவப்பட்டவை!

வெளியிட்டோர்: பட்டாம்பூச்சி பதிப்பகம் 
முகவரி: 28/A , கிருஷ்ணன் கோயில் தெரு, திருநகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை - 600037.
கைபேசி: 9841003366 
விலை: ரூ. 40
மின்னஞ்சல்: pattampoochi2008@gmai.com 

ஒரு அழகான தன் காதல் அனுபவத்தை பற்றி நம்ம மூத்த பதிவர் எழுதியதை இங்க படிங்க!! அனுபவம் புதுமை........................

நன்றி : தினமலர் -வாரமலர் 

அன்புடன், 
சமீரா..

இன்னும் நடக்க... "அன்பிற்கு ஒரு தினம்!!"

Wednesday, January 2, 2013

படித்ததில் பிடித்தது!! - பாவப்பட்ட (உழைப்பாளர்) நாய்கள்!!


இனிய காலை பொழுதில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!

காலைல உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லலாம்னு வந்தேன். என்னடா பாட்டி ஆகிட்டன்னு நினைக்க வேண்டாம். இது நம்ம சமுதாயம் பத்தினது. அதாங்க உழைப்பாளர் சமுதாயம் பத்தினது; அதான் இவ்ளோ அவரசமா பகிர்ந்துகொள்கிறேன். படிங்க! முடிஞ்சா கொஞ்சம் சிரிங்க; உடம்புக்கு ரொம்ப நல்லது. உங்க உடம்புக்கு தான்!!

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு...!

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையாபோச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில்நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்... நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல்நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....



கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டுசிக்னல்மதிச்சுபஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???


அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூடபொறுப்பே இல்லன்னு....

நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க, மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும்உனக்கு நல்ல பெயரே கிடைக்காது....


என்ன நண்பர்களே கதை பிடித்தா?? இல்லை என் காதை பிடிக்க ஓடிவரீங்களா?..... அப்போ அடுத்து ஒரு பேய் கதையுடன் வருவேன்....

அன்புடன் 
சமீரா 

இன்னும் நடக்க... "படித்ததில் பிடித்தது!! - பாவப்பட்ட (உழைப்பாளர்) நாய்கள்!!"

Tuesday, January 1, 2013

நந்தவனம்: முள்பாதை - மொழிபெயர்ப்பு நாவல்!



புத்தாண்டில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!!!

சமீபத்தில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய என் கருத்தை இங்கு பகிர்கிறேன்.

எவ்வளவு படித்தாலும் அவற்றில்  சில மட்டுமே மற்றவருடன் பகிர்ந்து கொள்ள மனம் விரும்பிடும். அப்படிப்பட்ட நாவல் தான் இப்போது உங்களுடன் நான் பகிர்ந்துகொள்வது.

தெலுங்கு நாவல்கள் பல படைத்து "நாவல் ராணி" என எல்லோராலும் புகழப்படும் திருமதி. யத்தனபூடி சுலோச்சனா ராணி அவர்களின் நாவலை தமிழில், திருமதி. கௌரி கிருபானந்தன் "முள்பாதை" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுபோல சுலோச்சனா ராணி அவர்களின் பல நாவல்களை திருமதி கௌரி அம்மாவினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


கௌரி கிருபானந்தன்
முள்பாதை எனும் நாவல் பற்றிய என்னுடைய பதிவு உங்களுக்காக:-

கதை சுருக்கம்: 
மீனா என்கிற மீனாக்ஷி - பிரபல வக்கீல் திரு. ஆனந்த ராவ், மகளிர் சங்க தலைவி திருமதி. கிருஷ்ணவேணி தம்பதிகளின் ஒரே செல்வ மகள். மிக செல்லமாக வளர்க்கப்பட்டவள். அதே சமயத்தில் அவளின் ஒவ்வொரு அசைவும் அம்மாவால் செதுக்கப்பட்டது. நடை, உடை, பாவனை பழகும் விதம் எல்லாம் கிருஷ்ணவேணி அம்மாவின் கட்டளைப்படியே நடக்கிறது. 

இந்த நாவல் முழுவதும் "தன்வினையில்" மீனா விவரிப்பது போலவே பயணிக்கிறது. இது என்னையே மீனாவாக உணர வைத்தது.


மீனாவின் மேல் அவளின் அம்மா செலுத்தும் ஆதிக்கம் "தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த சந்தோஷ் சுப்ரமண்யம் திரைப்படத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒருவேளை  இந்த நாவலின் தழுவலாகவே தெலுங்கில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கலாம். 

தன சுய விருபத்திற்கு இடமளிக்காமல் அம்மாவின் ஆசைக்கு அனைத்தையும் செய்யும் மீனா, ஒரு கட்டத்தில் அம்மா மீது அதீதமாக கோபமடைகிறாள்.  அம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்ற காரணத்தினாலேயே சாரதியை மணக்க மீனா விரும்பவில்லை. இதனால் அவன் தன் வீட்டில் தங்க வரும் நேரத்தில், அப்பாவின் ஒன்று விட்ட தங்கையான கமலாவின் வீட்டிற்க்கு முதல் முறையாக பயணமாகிறாள் மீனா. மேலும் வெளியூர் சென்ற தன் தாயாருக்கு தெரியாமல் அப்பாவின் உதவியோடு பயனப்படுகிறாள். இதுவே அவள் வாழ்கையின் திசையை மாற்றுகிறது. 

மீனா அப்பா பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர் பிரியமான கணவர். அன்பான அப்பா. தன் சுயத்தை இழந்தவர் 'வீட்டில்' மட்டும். மனைவியின் மீது கொண்ட அன்பால் தன் தங்கை குடுபத்துடன் நேரடியான உறவு பலத்தில் இல்லாமல், தங்கையின் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகனான கிருஷ்ணன் மூலமாக உறவை தொடர்கிறார். கிருஷ்ணன் அவர் தங்கை குடும்பத்தில் தூண். தந்தை மறைவுக்கு பின் மூன்று தங்கைகளையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள மூத்த மகன்.

மீனா தஞ்சை பக்கத்தில் உள்ள சிறு கிராமத்தில் வசிக்கும் தன் அத்தை வீட்டிற்க்கு ஒரு வாரம் விருதாளியாக செல்கிறாள். அங்குள்ள எளிமை, ஒருவர் மீதான மற்றவரின் பாசம், பற்றுதல் அவளை ஈர்க்கிறது. நகரத்தில் தன் குடும்பத்தில் இல்லாத ஒன்றான பாசம் பரிவு இவற்றை அந்த கிராம வீடு அவளுக்கு கொடுகிறது. 

அத்தை மகள் ராஜியுடன் அவள் நெருங்கி பழகி உயிர் தோழியாகிறார்கள்.  இருவருக்கும் இடையே அழகான ஒரு பூ நட்பாக மலர்கிறது.

ஆனாலும் அவளால் அங்கு நெருங்கமுடியாத உறவாக இருப்பது கிருஷ்ணன் தான். சில நாட்களில் இனம் புரியாத சண்டையில் இருக்கும் கிருஷ்ணன் மீது இன்னதென்று சொல்லமுடியாத ஒரு 'பூ' மலர்ந்து மணம் வீசுகிறது.  அதை அவர்கள் "நட்பு" என்கிறார்கள்.  ஒரு பக்கம் சாரதி-யுடனான திருமண ஒப்பந்தம் மறு பக்கம் கிருஷ்ணன். முடிவு எடுக்க முடியாமல் மீனா திண்டாடுகிறாள்.

இந்நிலையில் குத்தகை நிலத்தை சொந்தமாக்கிகொள்ளவும், தங்கையின் திருமணதிற்கு வரதட்சணை கொடுக்கவும் தன் சுயவிருப்பம் இல்லாமல் சுந்தரி என்ற பண்ணியார் பெண்ணை திருமணம் செய்ய கிருஷ்ணன் ஒப்புகொள்கிறான்.

தங்கையின் திருமண சமயத்தில் மீண்டும் மீனா மேலடூருக்கு  வருகிறாள். அந்த சமயத்தில் அப்பாவிடம் பேசி சண்டைபோட்டு அந்த குத்தகை நிலத்தை கிருஷ்ணன் பெயருக்கு மாற்றிய பத்திரத்துடன் கிருஷ்ணனை சந்தித்து கொடுக்க விரும்பியும் அவள் மீண்டும் வருகை தருகிறாள். ஆனால், விதிவசத்தால் அவள் தனிமையில் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருப்பதை சுந்தரி பார்த்து, கோவபட்டதொடல்லாமல், தன் திருமணத்தையும் நிறுத்தி, மறுநாள் நடைபெறவிருக்கும் ராஜியின் திருமணத்தையும் நிறுத்துகிறாள். 

இதனால் மனமுடைந்து ராஜியை தன்னுடன் ஊருக்கு அழைத்து செல்கிறாள் மீனா. அங்கு சாரதி ராஜியின் அடக்கம் பண்பு இவரால் ஈர்க்கப்பட்டு, மீனவுடனான திருமணத்தை நிறுத்தும் வழி தெரியாது திண்டாடுகிறான்.

இதே நேரத்தில் மீனாவிற்கு கிருஷ்ணன் மீதான எண்ணமும் ஆவலும் வலுபெறுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ணனை வற்புறுத்துகிறாள் மீனா. அம்மாவுடன் நின்று பேசகூட பயப்படும் மீனா தன் வாழ்கையை தன் இஷ்டபட்டவனுடன் தான் வாழ வேண்டும் என முதல் முறையாக முடிவெடுக்கிறாள். தன் உடுத்தும் உடை விஷயத்தில் கூட அம்மாவிடம் அறிவுரை கேட்டும் அவள் தன் வாழ்க்கை துணையை தாமாக தேர்வு செய்கிறாள். 


இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உரையாடல்களுடன் பயணிக்கிறது இந்த நாவல். இறுதியாக மீனாவின் ஆசை நிறைவேறியதா? மீனாவின் அம்மா கிருஷ்ணனை பழைய பகை மறந்து ஏற்றுகொண்டாரா? என்பதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.

ஒவ்வொருவரின் மன நிலையையும் கண்ணாடி போல் காட்டியுள்ளார் ஆசிரியர். நாவல் முடியும் போது ஏதோ ஒரு சொந்தம் என்னிடம் விடைபெற்று செல்வது போல உணரமுடிந்தது.


நாவலில் வரும் சில வரிகள்:

"இருபது வருடங்களாக எங்க அம்மாவின் சொசைட்டியில் நான் கற்றுக் கொள்ளாத, புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இங்கே கவனிக்க முடிந்தது. அவை ரொம்ப சின்னச் சின்ன விஷயங்களாக இருக்கலாம். சாதாரண வாழ்க்கையில் அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றின் பாதிப்பு நம்மையும் அறியாமல் நம்மீது பதிந்து விட்டிருக்கும்.

நான் வந்த ஓரிரண்டு நாட்களில் அத்தைக்கும் ராஜேஸ்வரிக்குமிடையே உள்ள பந்தம் எவ்வளவு மென்மையானதோ, எவ்வளவு உயர்வானதோ புரிந்து கொண்டேன். அத்தை சுபாவத்திலேயே குறைவாக பேசுபவள். வீட்டு விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது பெரிய மகனிடம் சொல்வதைத் தவிர மற்ற நேரங்களில் பேசியோ, பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது போலவோ என் கண்ணில் படவில்லை."

இந்த நாவலில் என்னை கவர்ந்த கதாபாத்திரங்கள்: கிருஷ்ணன் - இவனை பற்றி அதிகம் நான் சொல்லவில்லை. ஆனால் அவனின் தெளிவான முடிவெடுக்கும் திறன், ஆழ்ந்த ஆறிவு நம்மை அவன் பக்கமாக ஈர்க்கிறது. "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" - படித்தால் மட்டும் போதாது, அயராத உழைப்பும் வாழ்க்கைக்கு அவசியம் என்பதற்கு எடுத்துகாட்டு - கிருஷ்ணன்.  

அடுத்து மீனா: புத்திசாலி பெண். அம்மாவின் கண்ணுக்கு மட்டும் அவள் எப்போதும் அசடு மக்கு.. ஏனோ அம்மாவின் முன்னிலையில் அவளுக்கு முதுகெலும்பே இருபதாக தெரிவதில்லை. சில நேரங்களில் நமக்கே கோவத்தை வரவழைக்கும் ஒரு கதாபாத்திரம் இவள். 


இறுதியாக ஆனந்த ராவ்: அமைதியாக அதிகம் வலம் வராவிட்டாலும், மகளின் மீது மிகுந்த அக்கறையும், மனைவிக்காக மகளின் ஆசையை கூட நிராகரிக்கும் ஒரு கணவனாக வருகிறார். உயிர்ப்பான ஒரு கதாபாத்திரம்.

இதுபோல் பல நல்ல கதாபாத்திரங்களுடன் எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காமல், சலிப்பை ஏற்படுத்தாமல் பயணிக்கும் இந்த நாவல் இரு பாகங்களாக வெளிவந்துள்ளது.

புத்தகம் கிடைக்கும் இடம்: Alliance Company, 244 RKMutt Road, Mylapore, Chennai. 600004,  044 2464 1314. 

திருமதி கௌரி அவர்களின் எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் மேற்சொன்ன பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தவை.

இந்த அருமையான நாவலை நேரம் கிடைப்பின் வாங்கி படிக்கவும். மேலும் இவர்கள் மொழிபெயர்த்த மற்றொரு நாவலான செக்ரட்டரி பற்றி பின்னர் பகிர்கிறேன். இந்த நாவலும் திருமதி. யத்தன பூடி சுலோச்சனா ராணி அவர்களின் படைப்பு.

அன்புடன் 
சமீரா.
இன்னும் நடக்க... "நந்தவனம்: முள்பாதை - மொழிபெயர்ப்பு நாவல்!"

Friday, December 28, 2012

தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு



வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!!


இந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த முக்கிய அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வீடுதிரும்பளுக்காக எழுதியுள்ளேன். இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பினை அளித்த மோகன் குமார் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

பின்வரும் பதிவு இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது.


 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


கடந்த ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை அசைபோடுவதே இப்பதிவு!!


நல்லதும் சங்கடங்களும் நிறைந்த பத்து நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்கிறேன்.

1. கூடங்குளம் சார்ந்த நிகழ்வுகள் - இந்த அணுவுலை ஆரம்பிக்கப்பட்டபோது அதைப்பற்றி அறிந்தவர் மிக குறைவு. இப்போது அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு தெரியாதவர்கள் மிக மிக குறைவு. உச்சநீதி மன்றம் தனி நபருக்கு தீங்கு ஏற்பட்டாலும் அதை தொடர்ந்து செயலாற்றுதல் கூடாது என கூறியும், இன்னும் மூடப்படாத கூடங்குளம் அணுவுலை மக்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் தான்...! இவ்வளவு எதிர்ப்புக்கு பின்னும் அங்கு பணி தொடர்வது நம் அரசியலைப்பு சட்டம் ஒரு விசித்திரமானது என விளங்க வைக்கிறது! 

2. காவிரி நதி நீர் - காவிரி உற்பத்தியாவது மட்டுமே கர்நாடகம். அது பாய்ந்து வளம் கொழிப்பது தமிழ்நாட்டில். அணைபோட்டு தடுக்கும் உரிமையை யார் கர்நாடகத்திற்கு கொடுத்தது எனபது மட்டும் விளங்கவில்லை. காவிரி நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி நடக்கும் தைரியமும் ஒரு தனி மாநிலத்திற்கு இருப்பது நம் நாட்டின் சட்ட திட்டத்தில் இருக்கும் உறுதி மற்றும் நிலைபாட்டை காட்டுகிறது!!!!!

3. அந்நிய முதலீடிற்கு ஆதரவு தரும் நம் மாநில கட்சிகள். இருநூறு ஆண்டுகள் நாம் அடிமை பட்டது போதாது இன்னும் சில நூறு ஆண்டுகளாவது பிறர் பிடியில் நாம் இருக்க வேண்டும் என நினைக்கும் அற்ப மனிதர்களின் சூழ்ச்சிகள்.. வால்மார்ட் அதிகார பூர்வமாக அறிவிக்கும் முன்பே சில இடங்களில் அதற்கான விற்பனை கிடங்குகள் தொடங்கப்பட்டு, அதற்கான கார்பரேட் அட்டைகள் வழங்கப்பட்டதற்கு நானும் ஒரு சாட்சி தான்.

4. பள்ளிகளில் நடக்கும் கொள்ளைகள் - கட்டண தொல்லைகள் அனைவரும் அறிந்ததே! சமீப காலத்தில் அனைவரையும் திகிலடைய செய்த ஒரு சம்பவம் பள்ளி பேருந்தின் மோசமான பராமரிப்பு. பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்களின் நேரமின்மை கருதி பள்ளி வாகனங்களில் பெற்றோர் அனுப்புகின்றனர். ஆனால் அதற்கும் இப்போது பயப்படும் நிலையை ஏற்படுத்தியது: பள்ளி மாணவி பேருந்து ஓட்டையில் விழுந்து உரிழந்த சம்பவம்! மாணவியின் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் உலுக்கிய துயர சம்பவம் அது. இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமா? உரிமம் அளித்த RTO அலுவலகமா? தெரியவில்லை !

5. ஒரு பள்ளி மாணவன் தன ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்ச்சி பள்ளியில் நிகழ்ந்த இன்னொரு கொடுமை ! அவன் இந்த வழியை கையாண்டதற்கு சொல்லும் காரணம், அச்சமயம் அவன் பார்த்த ஒரு இந்தி படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்ததாம். அவனும் அதையே பின்பற்றினானாம் ! உண்மையில் அவனை தூண்டியது அவனுள் இருந்த ஆசிரியரின் மேலான காழ்ப் புணர்ச்சியா? சினிமாவின் தாக்கமா? பெற்றோரின் அரவணைப்பின்மையா? அல்லது ஆசிரியரின் அணுகுமுறையா? இதில் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றே தோன்றுகிறது. என்று தீருமோ இது போன்ற அனர்த்தங்கள்?????


**************************************************************************************************
என்னடா புத்தாண்டில் இப்படி ஒரு சோகமயமான நினைவுகளையே அசை போடவைத்து விட்டதாக எண்ண வேண்டாம். சில நினைவுகள் கசப்பாக இருந்தாலும் அவை பாகற்காய் போன்று பயனுள்ளது. ஒரு விழிபுணர்வுக்கு வழிவகுப்பது. 

நெல்லிக்காய் கடிக்கும் பொது அதன் சுவை முகம் சுளிக்க வைத்தாலும், கடைசியில் தொண்டையை விட்டு இறங்கும் போது இனிக்கவே செய்யும். அதுபோல சில நல்ல தகவல்களை அடுத்த ஐந்தாக தருகிறேன்.

6. TNPSC - எனும் அரசு வேலைவாய்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம் பாராட்டத்தக்கது. கணினி மயமாக்கப்பட்டதால் தற்போது தேர்வு எழுதிய அனைவரும் தாங்களே தங்களின் cut-off எனப்படும் மதிப்பெண் விபரங்களையும், தாங்கள் தேர்வு செய்யப்பட்டதையும் (Ranking) எனப்படும் தகுதி நிலை ஆகியவற்றை தெளிவாக அறியலாம். இதன் மூலம் இடைத்தரகர்களால் நடக்கும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 


7. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கவுன்செல்லிங் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற்று, பெண் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பணி நியமன ஆணையும் அந்தந்த மாவட்டங்குளுக்கு தனி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் வழங்கப்பட்டது.

8. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அவர்களின் பெயரில் நேரிடையாக வங்கிகளில் வழியாக வைப்பு நிதியாக கொடுக்கபடுகிறது. மேலும் சத்துணவில் 13 வகையான உணவுகள் சேர்க்கப்படவுள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி சீருடைகள் இலவசமான வழங்கபடுகிறது. ஆனாலும் இதெல்லாம் நல்லபடி சரியான முறையில் பயனாளர்களுக்கு சென்றடைய வேண்டும் அது தான் நமது வேண்டுகோள்!!!


9. இந்தியாவிலேயே முன்னோடியாக மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மாநில ஆதார வள மையம் தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மன நலம் குன்றிய குழந்தைகளுக்கான இந்த பள்ளியில் அவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இதில் என் நெருங்கிய உறவினர் குழந்தையும் பயன்பெற்றுவருகிறான். 


10. எய்ட்ஸ் விழிபுணர்வுக்கான செஞ்சுருள் விரைவு ரயில் டெல்லி-யில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டில் சென்னையில் முகாமிட்டு கன்னியாகுமரி -யில் தன் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தது. எய்ட்ஸ், காசநோய், மலேரியா, பன்றி காய்ச்சல், மகபேறு, குழந்தை நலம் சார்ந்த விழிபுணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த இளைஞர் தினத்தன்று இந்த முகம் நடைபெற்றது. 


இறுதியில் மிக முக்கிய ஒரு தினத்தை நினைவுகூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். ஆகஸ்ட் 26-ம் நாள் சென்னையில் நடைபெற்ற முதல் தமிழ் பதிவர் தினம் இந்த ஆண்டின் மறக்க முடியாத நாள் என்றால் அது மிகையில்லை. பல நட்புகளையும் உறவுகளையும் அறிமுகபடுத்திய அற்புத தினம் அது!!! 


இந்த ஆண்டில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பில் அனைவரையும் சந்திக்கும் ஆவலுடன் விடைபெறுகிறேன்.


நன்றி!!!!

அன்புடன் 
சமீரா
இன்னும் நடக்க... "தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு"